ஸ்ரீநகர்(காஷ்மீர்): அண்மையில் வடக்கு காஷ்மீரின் சோபோர் நகரில் 2 காவல் துறையினரும் 2 பொதுமக்களும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து சோபோர் நகரின் முக்கிய வீதிகளில் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவர்கள் குறித்து தகவல் கொடுத்து, கைது செய்ய உதவினால் தலா ரூ.10 லட்சம் தருவதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சுவரொட்டிகள் நகரின் முக்கிய வீதிகள்தோறும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் சோபோர் மாவட்டத்தின் போன்போரா டேஞ்சர்போரா என்னும் கிராத்தைச் சேர்ந்த முடசர் அஹமத் பண்டிட், பிரத்-கல்லன் பகுதியைச் சேர்ந்த குர்ஷீத் அஹமத் மிர், வார்போரா கிராமத்தைச் சேர்ந்த ஃபயஸ் அஹமத் வார் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.