தமிழ்நாடு

tamil nadu

மணீஷ் சிசோடியாவுக்கு வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்

By

Published : Mar 6, 2023, 8:31 PM IST

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல்
சிசோடியாவுக்கு நீதிமன்ற காவல்

டெல்லி: மதுபானக் கொள்கை முறைகேடு புகாரில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை, கடந்த 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவரை 5 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிசோடியாவின் சிபிஐ காவலை மேலும் 2 நாட்களுக்கு நீதிமன்றம் நீட்டித்தது.

இந்நிலையில் 7 நாட்கள் காவல் முடிந்து, மணீஷ் சிசோடியா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கே.நாக்பால் முன்னிலையில் இன்று (மார்ச் 6) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சிசோடியாவிடம் தற்போதைக்கு மீண்டும் விசாரணை நடத்த தேவையில்லை. தேவையெனில் பின்னர் அவரிடம் விசாரணை நடத்த கோரப்படும். அவர் கைது செய்யப்பட்டதை ஆம் ஆத்மி கட்சி அரசியல் ஆக்குகிறது" என குற்றம்சாட்டினார்.

பின்னர் சிசோடியா தரப்பில், "சிறைக்குள் மருந்துகள், மூக்குக் கண்ணாடி, பகவத் கீதை ஆகியவற்றை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் சிறையில் தியானம் செய்யும் அறையை ஒதுக்கித்தர வேண்டும்" என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியாவை திகார் சிறையில் வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி நாக்பால் உத்தரவிட்டார். 2 மூக்கு கண்ணாடிகள், குறிப்பேடு, பேனா, பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதி அளித்தார். தியானம் செய்யும் வகையில், அறை ஒதுக்குவது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரைத்தார். இதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

டெல்லி மாநில அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி, புதிய மதுபானக் கொள்கையை கொண்டு வந்தது. இதன் மூலம் சுமார் 800க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் உரிமம் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 2022-ம் ஆண்டு, சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, மதுபானக் கொள்கை திரும்பப் பெறப்படுவதாக டெல்லி அரசு அறிவித்தது. எனினும், சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியே இதற்குக் காரணம் எனப் புகார் தெரிவித்துள்ளார். நாட்டின் சிறந்த கல்வி அமைச்சரான சிசோடியா கைது செய்யப்பட்டதில், மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாக கெஜ்ரிவால் விமர்சித்தார்.

இதையும் படிங்க: 2 இதயம், 4 கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!

ABOUT THE AUTHOR

...view details