தமிழ்நாடு

tamil nadu

மகாராஷ்டிர புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்பு!

By

Published : Jun 30, 2022, 9:42 PM IST

மகாராஷ்டிர புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்கள் சந்திப்பு

மும்பை:மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே இன்று (ஜூன் 30) மாலை பதவியேற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக, ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இடம்பெறமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர், உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் வேண்டுகோளின் பேரில் ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் இணைந்ததாக குறிப்பிட்டார்.

மகாராஷ்டிர அரசியலில் நடந்தது என்ன?

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிர அரசியலில் நெருக்கடி நிலை நீடித்து வந்தது. அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா கட்சி முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக அதிருப்தி தெரிவித்து, அக்கட்சி மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கி விடுதியில் முகாமிட்டு இருந்தனர். ஷிண்டேவுக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு அதிகரித்ததால், உத்தவ் தாக்கரே கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, அம்மாநில ஆளுநர், உத்தவ் தாக்கரே அரசினை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோதிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, உத்தவ் தாக்கரே நேற்று (ஜூன் 29) முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும், எம்.எல்.சி பொறுப்பிலிருந்தும் விலகப்போவதாகவும் அறிவித்தார். பின்னர் இன்று (ஜூன் 30) அதிருப்தி சிவசேனாவின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக மாநிலத்தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருவரும் சந்தித்துப் பேசி, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

முதலமைச்சர் பதவியில் திடீர் திருப்பம்

முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சரும், பாஜக மாநிலத்தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்பார் என ஃபட்னாவிஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஃபட்னாவிஸ் கூறுகையில், "2019 மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால், பின்பு இந்த முடிவை அவமதிக்கும் வகையில் மகா விகாஸ் அகாடி அரசு ஆட்சியமைத்தது. நாங்கள் பாலாசாஹேப் இந்துத்துவா அமைக்க தான் முடிவு செய்தோம்" என்றார்.

மோடி, அமித்ஷாவுக்கு நன்றி

ஃபட்னாவிஸுக்கு நன்றி தெரிவித்து பேசிய ஷிண்டே, "ஃபட்னாவிஸ் முதலமைச்சராகியிருக்கலாம். ஆனால் இந்த முடிவு அவருடைய நல்ல மனதை காட்டுகிறது. நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்.

முன்னாள் முதலமைச்சர் தாக்கரேவிடம் எங்கள் தொகுதியின் குறைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கூறச் சென்றோம். அடுத்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்து முன்னேற்றத்தின் அவசியம் குறித்து அவருக்கு ஆலோசனை வழங்கினோம். பாஜகவுடன் கூட்டணியை நாங்கள் கோரினோம்.

சிவசேனாவைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் உள்பட 50 எம்எல்ஏக்கள் என்னுடன் உள்ளனர். இவர்கள் உதவியுடன் தான் இந்த சூழலை எதிர்கொண்டோம். இந்த 50 பேரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு கீறல் கூட சிதைக்க மாட்டேன்" என்று தெரிவித்தார்.

மேலும், தன் மீது தாராள மனப்பான்மை காட்டி, முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பிற பாஜக தலைவர்களுக்கு ஷிண்டே நன்றி கூறுவதாக தெரிவித்தார். இதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சரகவும் இன்று மாலை பதவியேற்றுக் கொண்டனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா: - நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இல்லை என அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details