தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 12:00 PM IST

ETV Bharat / bharat

Chandrayaan 3: விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு பெயர் 'சிவசக்தி' : பிரதமர் மோடி அறிவிப்பு!

'Shivshakti': நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கிய புள்ளி 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்றும், சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம், 'திரங்கா' என்று அழைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Chandrayaan 3
Chandrayaan 3

பெங்களூரு:நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கினாலும், ஆர்பிட்டர் செயல்பாட்டில் உள்ளது. சந்திரயான்-2 திட்டத்தின் தோல்வியைத் தொடர்ந்து, பல்வேறு மேம்பாடுகளுடன் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு கட்ட பயணத்திற்குப் பிறகு சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் திட்டமிட்டபடி கடந்த 23ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வை தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள், நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கிய அன்று, பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்தார். லேண்டர் தரையிறங்கும்போது அங்கிருந்து காணொளி வாயிலாக அதனை பார்வையிட்டார். லேண்டர் தரையிறங்கிய பிறகு விஞ்ஞானிகளுக்கு காணொளி வழியாக வாழ்த்துக் கூறினார்.

இந்த நிலையில், வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி, இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு சென்றார். அங்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விஞ்ஞானிகளிடையே உரையாற்றிய பிரதமர், சந்திரயான்-3 திட்டத்திற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.

நிலவின் தென்துருவத்தில் இந்தியா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது என்றும் கூறினார். விண்வெளிப் பயணங்களில் தரையிறங்கும் புள்ளிக்கு அறிவியல் ரீதியான பாரம்பரியம் உள்ளது என்றும், அதன்படி சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய புள்ளிக்கு 'சிவசக்தி' என்று பெயர் வைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.

அதேபோல், சந்திரயான்-2 லேண்டர் விழுந்து நொறுங்கிய இடம், 'திரங்கா' என்று அழைக்கப்படும் என்றும், அந்த திரங்கா புள்ளி, இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் உந்துதலாக இருக்கும், தோல்வி என்பது முடிவு அல்ல என்பதை அப்புள்ளி உணர்த்தும் என்றும் கூறினார். மேலும், சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பெண் விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chandrayaan-3: லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கிய பிரக்யான்! இஸ்ரோ வெளியிட்ட வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details