ஊரடங்கால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் பலரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்கின்றனர். இதுபோன்று நடந்துச் செல்வதால் பல இடங்களில் விபத்து ஏற்பட்டு மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே தொடர்கிறது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்திலிருந்து நடந்தே பிற பகுதிகளுக்குச் செல்லும் மக்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று (மே 16) மாலை அவர் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட அலுவலர்களுடனும் கலந்துரையாடினார்.
வெளி மாநில தொழிலாளர்கள் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் பேருந்துகளில் அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவையடுத்து மாநிலத்தின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சாலை போக்குவரத்து வழியாக மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு மக்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க:சிறுகுழந்தைகளுடன் 20 கி.மீ. நடந்தே வந்த பார்வையற்ற பெண் - காப்பகத்தில் சேர்த்த காவல்துறை!