உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் தனது கவலையை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கட்டணம் வசூலிப்பது துரதிருஷ்டமானது.
இதனை மத்திய - மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திங்கள்கிழமை (மே 4) சர்ச்சை வெடித்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் பணம் கொடுக்க முன்வந்த நிலையில், ஏற்கனவே ரயில் கட்டணத்தில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக கூறியது.