உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் 534 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அம்மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
ஆந்திராவில் மே 3ஆம் தேதி வரை பள்ளி-கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, திருப்பதி கோயிலில் தரிசனம் செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, மார்ச் - மே காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட அர்ஜிதா சேவை டிக்கெட்டுகள் அனைத்தையும் ரத்து செய்து, முழு பணத்தைத் திருப்பித் தருவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் அனில் குமார் சிங்கால், “ஆந்திர பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு எந்தவிதமான தொற்றுப் பரவலும் ஏற்படாமல் தடுக்க நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.”என்றார்.