தந்திரங்கள், உத்திகள் வகுப்பதில் முற்காலத்தில் சாணக்கியர், கெளடில்யர் போன்றோரை ஆகச் சிறந்தவர்கள் என்று காலம் காலமாக நாம் உதாரணம் கூறுவதுண்டு. ஆனால் இன்றைய அரசியலில், அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல், அரசியல் நடவடிக்கைகளில் தந்திரங்கள், மந்திரங்கள் கையாளப்படுகின்றன. இதற்கு ஆகச் சிறந்த உதாரணம் என்றால், சமீபத்திய மகாராஷ்டிர அரசியல் நிகழ்வுகளைக் கூறலாம்.
அரசியலிலும் சரி, கிரிக்கெட்டிலும் சரி எந்த நேரத்திலும் எதிர்பாராத நிகழ்வுகள் எதுவும் நடக்கலாம் என சில நாட்கள் முன்பு தான், மத்திய அமைச்சரான நிதின் கட்கரி திருவாய் மலர்ந்திருந்தார். அது மகாராஷ்டிரா அரசியலில், பதவியேற்ற 4 நாளில் பட்னாவிஸ் செய்த ராஜினாமாவின் மூலம் நிரூபணமாகிவிட்டது. எதிர்பாரா திருப்பமாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்தன. முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் தேர்வு செய்து, ஒருமித்த முடிவுக்கு கடந்த 22-ந் தேதி இரவு 8 மணிக்கு வந்து விட்டன. ஆனால் மறுநாள் காலை 8 மணிக்கு எல்லாமே தலைகீழ் மாற்றமாகி, ஒட்டு மொத்த இந்தியாவையே பரபரப்பாக்கி விட்டது. அடுத்தடுத்து என்ன அதிரடி செய்திகள் வரப் போகின்றனவோ? என அனைவரையும் டிவிமுன் கட்டிப்போட்டுவிட்டது பாஜகவின் பட்னாவிஸ் முதல்வரான சம்பவம். அந்த ஒரே நாள் நள்ளிரவில், ஆபரேசன் ஆகார்ஸ் என்ற பெயரில் பாஜக மேற்கொண்ட அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால், தேசியவாத காங்கிரசின் சட்டமன்ற குழுத்தலைவரான அஜித் பவார், பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்கு மாறினார். அக்கட்சியின் 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில், இரவோடு இரவாக குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டு, பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்ற நிகழ்வு அரங்கேறி விட்டது. ஆனால் பட்னாவிசை மீண்டும் முதல்வராக்க முடிந்த அஜித் பவாரால், எதிர்பார்த்தபடி தேசியவாத காங்கிரசில் எந்த பிளவும் ஏற்படுத்த முடியவில்லை. பிளவும் ஏற்படவில்லை. இதனால் பட்னாவிஸ் அரசுக்குத் தேவையான பெரும்பான்மை பலம் கிடைப்பதும் சந்தேகமாகி விட்டது.
இந்நிலையில் தான், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, வழங்கிய அதிரடி தீர்ப்பையடுத்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்ய, நிலைமை தலைகீழாகியது. இதனால் மெஜாரிட்டியை நிரூபிப்பது இயலாது என உறுதியானதால்,வேறு வழியின்றி பட்னாவிசும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இப்படி பதவியேற்ற 4 நாட்களிலேயே பாஜக பின் வாங்கி, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க வழிவிட்டது. தங்களுக்குள் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி, தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் நிலையான ஆட்சியைத் தரமுடியுமா? என்பது தான் இப்போதைய கேள்வி.
இதற்கு முன்னர் 1996-ல் மத்தியில் வாஜ்பாய் 13 நாட்கள் பிரதமராக இருந்த போதும், மெஜாரிட்டிக்கு எதிர்க்கட்சிகளின் தயவை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது வாஜ்பாயோ, எதிர்க்கட்சிகளை உடைத்து தான் ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்றால், அப்படி இந்தப் பதவியே தேவையில்லை என்று கூறிவிட்டதும் நடந்தது. அப்படி கொள்கைகளை விட்டுக் கொடுக்காத அரசியல் நாகரீகம் அப்போது இருந்தது. ஆனால் இன்றைக்கோ, கொள்கைகள், சித்தாந்தங்களை எல்லாம் புறந்தள்ளி பதவி, அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது.மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் 21-ல் நடந்த தேர்தலில், பாஜக கூட்டணியில் 25.6 சத வாக்குகளைப் பெற்று 56 இடங்களில் வென்றது சிவசேனா. பாஜக கூட்டணிக்கு ஆட்சியமைக்கத் தேவையான இடங்களுக்கும் கூடுதலாகவே பலம் இருந்தும், முதல்வர் பதவி உள்ளிட்ட அதிகாரப்பகிர்வில் சிவசேனா முரண்டு பிடித்ததால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டது. அதன் பின் காங்கிரஸ் முதலில் தயங்கினாலும், ஒரு வழியாக தயவு காட்ட, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - கூட்டணி அரசு ஆட்சியமைந்து, சிவசேனாவுக்கு முதல்வர் பதவியும் கிடைத்துவிட்டது.