தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஸ்டெர்லைட்டை விரட்டியடித்தவர்களின் மற்றொரு வெற்றி!

முன்பு ஸ்டெர்லைட்டை விரட்டிய ஃபார்முலாவை மீண்டும் பயன்படுத்தி, சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலையையும் நுழையவிடாமல் தடுத்த ரத்தினகிரி மக்கள்..!

Ratnagiri

By

Published : Aug 7, 2019, 8:03 PM IST

கார்ப்பரேட் மற்றும் அந்நிய முதலீடுகளால் நிறுவப்படும் ஆலைகள் மூலம் இயற்கை வளம் சுரண்டப்படுவது உலகம் எங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆலைகள் நிறுவப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது. இப்படியான ஒரு ஆலையை மஹாராஸ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (நானார்) உருவாக்க திட்டமிட்டது ஆளும் பாஜக அரசு.

1992-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (Maharashtra Industrial Development Corporation) ரத்தினகிரியின் கடலோரப் பகுதியில் ஸ்டெர்லைட் என்ற உருக்காலைக்காக கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்குகிறது. ரத்தினகிரி மக்கள் விவசாயம், தோட்டக்கலை, மீன்பிடித் தொழிலை நம்பி இருப்பவர்கள். மாம்பழத்தில் மிகவும் பிரபலமான அல்ஃபோன்ஸா அந்த மண்ணில்தான் அதிகமாக விளைகிறது. அல்ஃபோன்ஸா மாம்பழத்தின் வளர்ச்சி சிறு சுற்றுச்சூழல் கேடையும் தாங்காது. ரத்தினகிரி மக்கள் ஸ்டெர்லைட் ஆலை அங்கு அமைவதை விரும்பவில்லை. போராட்டம் வெடிக்கிறது. இந்தப் போராட்டம் ஓராண்டு காலம் நீடித்தது. மக்களின் போராட்டத்தை மதிக்காத மாநில அரசாங்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கான கட்டுமானப் பணியை மேற்கொள்கிறது.

1993 டிசம்பர் 13 அன்று, 20,000 மக்கள் ஒன்றாக திரண்டு சென்று ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை அடித்து நொறுக்குகின்றனர். வேறு வழியின்றி மாநில அரசு பின்வாங்குகிறது. ஸ்டெர்லைட் ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. 1997-ஆம் ஆண்டு அதே ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தின் தூத்துக்குடி பகுதியில் நிறுவப்படுகிறது.

இயற்கை வளத்தையும், தங்கள் வாழ்வாதாரத்தையும் விட்டுக்கொடுக்காத போராட்ட குணம் நிறைந்த ரத்தினகிரி மக்களுக்கு அடுத்ததாக வந்த தலைவலிதான் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் லிமிடெட். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய பெட்ரோலிய ஆலையாக உருவாகவுள்ளது. இதனை அமைக்க மாநில அரசின் கைவசம் உள்ள நிலம் போக 15,000 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

இந்த ஆலை ரத்தினகிரி (நானார்) பகுதியில் அமையும் பட்சத்தில், ஆயிரக்கணக்கான விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஸ்டெர்லைட்டை போராடி விரட்டிய அப்பகுதி மக்கள், இந்த முறை நாதியற்றவர்களாக்கப்பட்டு அடித்துத் துரத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. ஏனென்றால், ஸ்டெர்லைட் போல் இது வெறும் 700 கோடி ரூபாய் திட்டமல்ல, இந்தத் திட்டத்தின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய். இதில் சவுதியின் எண்ணெய் நிறுவனங்களான சவுதி அரம்கோ (Saudi Arabian Oil Company), அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவை இத்திட்டத்துக்கு விளம்பரதாரர்களாக செயல்பட இருக்கின்றன. 2018-ஆம் ஆண்டே இந்தத் திட்டத்துக்கான ஒப்பந்தம் முடிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தான், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.

பெட்ரோலியம் ஆலைக்கு எதிரான போராட்டம்

ரத்தினகிரி மக்கள் இத்திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மராத்திய மண்ணின் காவலர்கள் என தங்களை பிரகடனப்படுத்திக்கொண்ட சிவசேனா அப்பகுதி மக்களுக்கு ஆதரவாக நின்றது. பெட்ரோலிய ஆலை அமைக்கும் பணி தொடர்பாக நானார் பகுதிக்கு வரும் அலுவலர்களை அவர்கள் அனுமதிப்பதில்லை. விவசாயிகள், மீனவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவதைப் பார்த்து மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் இந்தத் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

”ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை திட்டத்தை ரத்தினகிரி மாவட்டத்தில் மாநில அரசு செயல்படுத்தப் போவதில்லை. மும்பையில் இருந்து 400 கி.மீ., தெற்கே அமைந்துள்ள ஒரு பகுதியில் அதனை செயல்படுத்த இருக்கிறோம்”- என்றார். ஆனால் எந்த இடம் என்பதை தேவேந்திர பட்நாவிஸ் கூறவில்லை. அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவுமில்லை. பின்னர் சட்டமன்றத்தில் ராய்காட் மாவட்டத்துக்கு இத்திட்டத்தை மாற்றப்போவதாக அவர் அறிவித்தார்.

பெட்ரோலிய ஆலை தொடர்பான அலுவலர்களை அனுமதிக்காத மக்கள்

ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை திட்டத்தை தீவிரமாக எதிர்த்த சிவ சேனா கட்சி, மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்து வெற்றிபெற்றது. மஹாராஸ்டிராவின் சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் நடைபெறவுள்ளது. சிவ சேனாவின் ஆதரவு பாஜகவுக்கு தேவை என்பதால் இத்திட்டத்தை ராய்காட் மாவட்டத்துக்கு மாற்றியாக வேண்டிய சூழல் உள்ளது. நானார் கிராமத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் கைவிட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ராய்காட்டில் இத்திட்டத்தை நிறைவேற்ற 40 கிராமங்களை கையகப்படுத்த மஹாராஸ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. அம்மக்களுக்கு இதன்மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகவும் உறுதியளித்துள்ளது. ராய்காட் ஏற்கனவே தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிதான், அதனால் அந்த மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ, ஸ்டெர்லைட்டை விரட்டியடித்த மக்கள், மீண்டும் தங்கள் இயற்கை வளத்தைக் காக்க நடத்திய போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

Courtesy: Front line, Arabian business, news click

ABOUT THE AUTHOR

...view details