வயநாடு தொகுதியில் களம் காணும் ராகுல் காந்தி: உறுதிப்படுத்திய காங்கிரஸ்
2019-03-31 11:23:32
திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை அக்கட்சி உறுதி செய்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தான் வழக்கமாக போட்டியிடும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அதோடு அவர் கூடுதலாக தென் மாநிலத்திலும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. முன்னதாக கன்னியாகுமரி தொகுதியில்கூட அவர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. பின் கேரளாவின் வயநாடு தொகுதியில் அவர் போட்டியிடப்போவதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறிவந்தன.
இந்த நிலையில், ராகுல் காந்தி வயநாடு தொகுயில் போட்டியிடுவதை பாதுகாப்புத்துறை முன்னாள் அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்த அக்கட்சி மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணி உறுதிப்படுத்தியுள்ளார். "ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வயநாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் பலம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படுகிறது. தென் மாநில மக்கள் மீதும் சிறுபான்மையினர் மீதும் அக்கட்சி அக்கறை கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் இது அமையும் என கருதப்படுகிறது.