தமிழ்நாடு

tamil nadu

'நவம்பர் 9 ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க நாள்' - பிரதமர் நரேந்திர மோடி

By

Published : Nov 9, 2019, 6:39 PM IST

அயோத்தி தீர்ப்பு வெளியாகியுள்ள தினமான நவம்பர் 9ஆம் தேதி ஒற்றுமையை வலியுறுத்தும் வரலாற்று சிறப்புமிக்க நாள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Modi

அயோத்தி வழக்கில் ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை ஒன்றை மூன்று மாதங்களில் மத்திய அரசு அமைத்திட வேண்டும் எனவும் மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கியும் உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

இந்த நாள் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்தியாவின் ஜனநாயகம் வலிமையானது எனவும் உயிர்ப்புடையது என்றும் ஒட்டுமொத்த உலகிற்கும் இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளியானதும் நாட்டு மக்கள் அதைப் பின்பற்றி ஒற்றுமையுடன் முன்னின்று அமைதியை நிலைநாட்டிவருகின்றனர்.

இந்தியாவின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை. இன்று அந்த சிறப்பம்சம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் பொன்னான வரலாற்றை இந்திய நீதித் துறை படைத்துள்ளது.

நவம்பர் 9ஆம் தேதி வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். பெர்லினின் சுவர் இடிக்கப்பட்டு, வெவ்வேறு பிரிவுகளின் வேற்றுமை நீக்கப்பட்டு ஒற்றுமையை அது நிலைநிறுத்தியது. அதேபோல் இன்று, இந்தியா - பாகிஸ்தான் ஒற்றுமையை நிலைநாட்டும் விதமான கர்தார்பூர் வழித்தட சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, அயோத்தி நில விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு வேற்றுமை, எதிர்மறைத்தன்மையை நீக்கி ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான தீர்ப்பாக அமைந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாம் இந்த தீர்ப்பைக் கொண்டு புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும்.

ராமர் கோயில் கட்டுவதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டின் குடிமக்களுக்கு தேசத்தின் கட்டுமானத்திற்கான பொறுப்பும் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. அதை நாம் ஒன்றிணைந்து முன்னேற்றம் கண்டு வெற்றி காண வேண்டும். நாளை மிலாது நபி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் பாருங்க: அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சேலத்து சிங்கப்பெண்!

ABOUT THE AUTHOR

...view details