மத நல்லிணக்கத்தில் தீவிர ஆதரவாளரான காந்தி தனது அனைத்து பிரார்த்தனைக் கூட்டங்களிலும் பல்வேறு மதங்களில் உள்ள புனித நூல்களை மேற்கோள்காட்டும் வழக்கத்தைக் கொண்டவர். இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் நண்பர்கள் மூலமாகப் பல்வேறு மதங்களை பற்றிய புரிதல் காந்திக்கு ஏற்படத் தொடங்கியது.
சைவ உணவுப் பழக்கத்தையும், மதுவிலக்கு கொள்கையை தீவிரமாக கடைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவரான காந்திக்கு, மேற்கண்ட பழக்கங்களை உள்ளடக்கிய கிறிஸ்துவ மதத்தின் மீது இந்தப் பழக்கங்கள் சார்ந்த விமர்சனங்களை ஆரம்ப காலத்தில் முன்வைத்தார்.
இருப்பினும், இங்கிலாந்தில் வாழும்போது பைபிளை வாசிக்கத்தொடங்கிய காந்திக்கு அம்மதத்தின் மீது தீவிர ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக மலைப்பிரசங்கப் பகுதியில் வரும் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற இயேசு கிறிஸ்துவின் பொன்மொழியானது அவருக்குள் பெரும் திறப்பை உருவாக்கியது.
பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி பைபிளை வாசிக்கும் முன்னரே தீமையை நன்மையால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தானது ஜைன மதம், ஜொராஸ்ட்ரிய மதம் ஆகியவற்றின் பரிச்சயத்தால் காந்தியின் மனதில் உருவாகிருந்தது. தன் இளம் வயதிலேயே காந்திக்கு பல மதங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கும் பண்பை அவர் பெற்றிருந்தார். இந்த அரவணைக்கும் பண்பு இளம் வயதிலேயே அவருக்கு விதைக்கப்பட்டிருந்தது. சுதந்திரத்தின்போது ஏற்பட்ட பிரிவினைக்கு காந்தி துணைப் போனதாக அவர் மீது விமர்சனம் எழுப்பப்படுகிறது. அதேவேளையில் பிரிவைனை கருத்தை மக்கள் மனதில் நேரடியாக விதைத்த இந்து, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளை இரு தரப்பும் கண்டுகொள்வதே இல்லை.
மவுண்ட்பேட்டன், நேரு, பட்டேல், ஜின்னா ஆகியோரின் இறுதி முடிவின்படியே இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை. இதன் பார்வையாளராகவே மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்ட காந்தி விரக்தியின் காரணமாகவே சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. கொல்கத்தாவில் நடைபெற்ற நவகாளி கலவரத்தை அடக்கி இரு மதங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை விதைக்கும் பணியில் காந்தி ஈடுபட்டார். நவகாளி யாத்திரையில் காந்தி இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும், பாகிஸ்தானில் இருக்கும் இந்து, சீக்கிய சிறுபான்மையினருக்கும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென 1948ஆம் ஆண்டு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர் காந்தி. காந்தியின் இந்தச் செயல்பாட்டை தூற்றிப்பேசிய இந்துத்துவவாதிகள் அவரை இஸ்லாமியர்களின் ஆதரவாளராக முன்னிறுத்தினர். அதேவேளையில் பாகிஸ்தானில் சிறுபான்மை இந்து மக்களுக்கு அநீதி நிகழும்போது அதற்கெதிராக அவர் எழுப்பிய குரலை இவர்கள் மறைக்கவே முற்படுகின்றனர். இந்து - இஸ்லாமிய மக்களுக்கு இடையே நடந்த மோதலுக்கு காந்தியின் படுகொலை முற்றுப்புள்ளி வைத்தது எனலாம்.அப்போதைய மத்திய உள் துறை அமைச்சரான சர்தார் படேல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தடை செய்ததும் அப்போது அமைதியை நிலைநிறுத்த காரணமாக அமைந்தது.
காந்தியின் மறைவுக்குப் பின் நாட்டில், மதவாதமானது மீண்டும் தலைத்தூக்கத் தொடங்கியுள்ளது. பெரும்பான்மைவாத மனப்பான்மை ஜனாநாயகத்தின் அடிப்படைத் தன்மையையே கேள்வியெழுப்பும் நிலைக்கு தள்ளியுள்ளது. மதவாதச் சிந்தனை நாட்டிற்கு சீர்கேட்டையே விளைவிக்கும். சமய நல்லிணக்க உண்ணா நோன்பில் காந்தி மதவாதம் நமக்கிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சூழலானது ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கும். இன்றையத் தலைமுறையினருக்கே காந்தியின் சகிப்புத் தன்மையும் சமூக நல்லிணக்கப் பண்பும் பெரிதும் தேவைப்படுகிறது. இதுவே இந்தியச் சமூகத்தை அமைதியான மேம்பட்டச் சூழலுக்கு எடுத்துச் செல்லும் எனலாம்.