உலகை மிரட்டிவரும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடிவரும் அரசியல் தலைவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கேரளாவின் கோட்டையம் மாவட்டம் ஏலக்காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ள புனித மரியம்மை தேவாலயத்தில் நேற்று நூதன கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஞாயிறு சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில், அரசியல் தலைவர்கள் யாரும் நேரில் வரவில்லை. மாறாக அவர்களின் புகைப்படங்களுடன் கூடிய அட்டைப்பெட்டிகளாலான கட்டவுட்டுகளே கூட்டத்தில் கலந்துகொண்டன!
இதில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடி, ஏன், போப் ஆண்டவர் பிரான்சிஸின் கட்டுவுட்டுகள் நாற்காலியில் அமர்ந்திருந்தன.
இதுகுறித்து அந்த தேவாலய பாதிரியார் பவுல் செல்லவீட்டிலிடம் கேட்டபொழுது, "கரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். ஆகையால் அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர், என வைரஸ் பரவலைத் தடுக்கப் போராடி வரும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க : பேரறிஞர் அண்ணா குறித்த கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!