தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 10, 2019, 10:04 PM IST

Updated : Sep 10, 2019, 10:16 PM IST

ETV Bharat / bharat

38 வயதில் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்த மகா தாய் - ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!

மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற 38 வயதாகும் பெண். இவர் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா பெண்

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கிட்டத்தட்ட மக்கள் தொகை 130 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், குழந்தை வளர்ப்பு என்பது அனைத்து பெற்றோர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளது. தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பள்ளி செலவு, வீட்டு செலவு, அத்தியாவசிய தேவைகள், குழந்தைகளுக்கான உணவு, பெட்ரோல், மின் கட்டணம் என அனைத்தையும் சமாளிப்பதற்கு குடும்பத்தின் கணவர் - மனைவி இருவரும் வாழ்க்கையில் முக்கால்வாசி நேரங்களில் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலவுக்குச் சென்ற விக்ரம் லேண்டரை போல் எங்கு உள்ளது எனத் தெரியாத அளவிற்கு அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதில் நம் முன்னோர்கள் போல் அல்லாமல் தற்போதைய தலைமுறை மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். பெரும்பாலும் இரு குழந்தைகள் போதும் என்ற நிலைக்கு இந்திய மக்கள் வந்துவிட்டனர்.

இந்நிலையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லங்காபாய் காரத் என்ற 38 வயதாகும் பெண். 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ளது மருத்துவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

20ஆவது முறையாக கர்ப்பமான மகாராஷ்ட்ரா பெண்

நாடோடி கோபால் சமூகத்தைச் சேர்ந்த இந்தப் பெண் இதுவரை 20 முறை கர்ப்பமடைந்துள்ளார். அதில் 16 முறை பிரசவம் நடந்துள்ளது. அந்த பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களில் உயிரிழந்ததாகவும், மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், தற்போது 11 குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20ஆவது முறையாக கர்ப்பமடைந்துள்ள சம்பவம் சுகாதார அலுவலர்கள் மத்தியிலும், மருத்துவர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதில் முக்கியத் தகவல் என்னவென்றால், இதுவரை நடைபெற்றுள்ள 16 பிரசவங்களும் வீட்டிலேயே வைத்து பார்க்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர்கள் பேசுகையில், 'லங்காபாய் 20ஆவது முறையாக கர்ப்பமாகியுள்ளார் எனத் தெரிய வந்ததையடுத்து, அவர் உடனடியாக சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்டது. தற்போது கர்ப்பமடைந்து 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தாய் - சேய் இருவரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.

Last Updated : Sep 10, 2019, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details