பேருந்தின் டயரில் சிக்கி ஆசிரியர் உயிரிழப்பு.. வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்! - Namakkal bike accident - NAMAKKAL BIKE ACCIDENT
Published : Apr 8, 2024, 10:25 AM IST
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் அரசுப் பள்ளியில் தாவரவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜெயபால் (50). தற்போது தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விடுமுறை நாட்களில் அரசுப் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி தேர்தல் பயிற்சி பணிக்காகச் சென்று விட்டு, மாலை 4 மணிக்கு மேல் ஜெயபால் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, வேட்டாம்பாடி என்னும் இடம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஜெயபால் முன்னே சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையிலிருந்த பள்ளத்தில் வாகனம் சிக்கியதால், தடுமாறிய ஜெயபால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளார்.
அப்போது பேருந்தின் டயர் ஜெயபால் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்து வந்த நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ஆசிரியரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.