தமிழ்நாடு

tamil nadu

வெளிநாட்டில் வேலை செய்யும் கணவர் பெயரில் போலிச் சான்று.. நிலத்தை விற்று பணத்துடன் பதுங்கிய மனைவி கைது! - Fake certificate

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 11:30 AM IST

Fake certificate:வெளிநாட்டில் வேலைச் செய்த கணவனுக்குத் தெரியாமல் 8 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்பனைச் செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்
கைது செய்யப்பட்ட நபர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னை ஆலந்தூரரை சேர்ந்தவர் ரகு வீரபாண்டியன். இவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கெஜலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியினர் ஒன்றாக இணைந்து தங்களுடைய பெயரில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமன்சேரி பகுதியில் 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பு நிலத்தை வாங்கியுள்ளனர்.

இதனையடுத்து கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இருவரும் பிரிந்து வாழலாம் என முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரகு வீரபாண்டியன் அமெரிக்காவிலும், கெஜலட்சுமி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ரகுவீரபாண்டியன் பெயரில் கெஜலட்சுமி போலியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் ரகு வீரபாண்டியனுக்குத் தெரியாமல் பேர்ணாம்பட்டு சின்னதாமன் சேரியில் உள்ள 8 ஏக்கர் 11 சென்ட் தென்னந்தோப்பை ரூபாய் 85 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு திரும்பிய ரகுவீரபாண்டியன் இதுகுறித்து அறிந்து அதிர்ச்சடைந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். ரகுவீரபாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி மணிவண்ணன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் டிஎஸ்பி சாரதி மேற்பார்வையில் ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இது தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால் நிலம் விற்ற பணத்துடன் கெஜலட்சுமி தலைமறைவானதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்த கெஜலட்சுமியை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கோயம்பேடு சாலையில் ஆட்டோவில் சாகசம்.. போலீசார் செய்த சிறப்பான செய்கை!

ABOUT THE AUTHOR

...view details