சென்னை:கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழக மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் பலவகையான காய்கறிகள் வருகிறது. காய்கறிகளைப் பொறுத்தவரை, கடந்த 20 நாட்களுக்கு மேலாக விலை உயர்ந்து கொண்டே இருந்தாலும், தக்காளியின் விலை உயராமல் இருந்தது.
இந்நிலையில், தக்காளி விலை உயர்ந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு தக்காளி வியாபாரி தியாகராஜன் கூறுகையில், கடந்த 2 தினங்களாக தக்காளி வரத்து குறைவானதால், தக்காளி விலை நேற்றைய முன்தினம் கிலோ 60 ரூபாய்க்கும், நேற்றைய தினம் 10 ரூபாய் குறைந்து கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார். தினமும் 800 டன் வர வேண்டிய தக்காளி வரத்து, 500 டன் ஆக குறைந்துள்ளதால், கடந்த சில தினங்களாக கிலோ 35 ரூபாய் விற்பனையான தக்காளி கிலோ 60 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறினார்.
இதேபோல், கோயம்பேடு சந்தைக்கு தினமும் 450 - 500 வரை காய்கறி வாகனம் வர வேண்டிய நிலையில், தற்போது 350 வாகனங்கள் தான் வருகிறது எனவும், பீன்ஸ் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறி வருகிறது எனவும் தெரிவித்தார்.