தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: 'ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பு..கோழைத்தனமான கொடூரம்' - திருமாவளவன் கண்டனம் - BSP Leader Armstrong Murder - BSP LEADER ARMSTRONG MURDER

Thirumavalavan Condemns to Armstrong Murder: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், குற்றவாளிகளைக் குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம்
திருமாவளவன் மற்றும் ஆம்ஸ்ட்ராங் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, BSP TN Unit FB page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 10:07 AM IST

சென்னை: பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சமூக விரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது. சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்த கொடூரத்தை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து, குண்டர் தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

அன்பு சோகோதரர் ஆம்ஸ்ட்ராங் புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கை வழியில் கடந்த பல பத்தாண்டுகளாகத் தீவிரமாகத் தொண்டாற்றியவர். தமிழ்நாட்டில் பௌத்தத்தைப் பரப்புவதில் அதீத முனைப்புடன் செயல்பட்டவர். புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாளில் ஆண்டுதோறும் ஏராளமான தோழர்களுடன் நாக்பூருக்குச் சென்று வருவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.

சென்னை - பெரம்பூர் பகுதியில் அவரது இல்லத்தின் அருகில் பௌத்த விகார் ஒன்றைக் கட்டியுள்ளார். பண்பாட்டுத் தளத்தில் பௌத்தமே மாற்று என்பதை முன்னிறுத்தியவர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் செல்வி மாயாவதி அம்மையாரின் நன்னம்பிக்கைக்குப் பாத்திரமானவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியவர். ஏழை - எளிய குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகளைப் படிக்க வைப்பதில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர். அண்மையில்தான் தனது ஒரு வயது பெண் குழந்தைக்கு முதலாம் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினார்.

அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்பு சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கிற்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: BSP தமிழ்நாடு தலைவர் படுகொலை: பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details