தமிழ்நாடு

tamil nadu

ஆரோவில் கடலில் மூழ்கி உ.பி., இளம்பெண் பலி.. நண்பனின் தாய், கெஸ்ட் அவுஸ் ஊழியர் மீது சந்தேகம்.. புதுச்சேரியில் நடந்தது என்ன? - up girl death

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 10:39 AM IST

UP GIRL DEATH: புதுச்சேரி கோட்டக்குப்பம் அருகே உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த விவகாரத்தில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரி காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்நிலையம் மற்றும் உயிரிழந்த பெண் சௌமியா
காவல்நிலையம் மற்றும் உயிரிழந்த பெண் சௌமியா (Credits- ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி அடுத்த நாகாவா ஸ்ரீவித்ய சாதனா பீட் பகுதியைச் சேர்ந்தவர் பிரமோத் சர்மா. இவரது மகள் சௌமியா(24). இவர் அரியானாவில் உள்ள அசோகா பல்கலைக்கழகத்தில் படித்தபோது திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த சித்தார்த் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சித்தார்த் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், சித்தார்த்தின் தாய் ஜெயந்தி சென்னையில் தனது சகோதரி வீட்டில் வந்து தங்கியிருந்தார். சௌமியாவும் பெங்களூருவில் உள்ள தந்து அக்கா அனுக்ரா சர்மாவுடன் தங்கி இருந்துள்ளார். ஜெயந்தியும், சௌமியாவும் கடந்த 22-ஆம் தேதி புதுச்சேரி வந்துள்ளனர்.

ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இருவரும் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் தியான கூடம், சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தனர். கடந்த 24-ஆம் தேதி ஜெயந்தி சென்னைக்கும், சௌமியா பெங்களூருவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி அன்று மதியம் ஜெயந்தி சென்னைக்கு சென்று விட்டார். சௌமியாவுக்கு பெங்களூருக்கு செல்ல இரவு தான் பேருந்து என்பதால் கெஸ்ட் ஹவுஸ் வரவேற்பு அறையிலிருந்துள்ளார். திடீரென அவர் ஏற்கனவே சென்று வந்த பிள்ளைச்சாவடி கடற்கரைக்கு செல்வதற்காக கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

பின்னர், சுரேஷ், சௌமியாவை ஒரு பைக்கில் அங்கு அழைத்துச் சென்றதாகவும், மேலும், அதே விடுதியில் அறை எடுத்துத் தங்கி இருந்த ஒடிசா பகுதியைச் சேர்ந்த மணீஸ் மற்றும் டாக்டர் கணேஷ் மற்றொரு பைக்கில் கடற்கரைக்கு சென்றுள்ளனர். டாக்டர் கணேஷ் கடற்கரையில் அமர்ந்திருந்த நிலையில், சௌமியா மற்றும் கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ் கடலில் இறங்கி குளித்தனர். கெஸ்ட் ஹவுஸில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்பதால் ஒடிசா பகுதியைச் சேர்ந்த மணீசும் அவர்களுடன் சேர்ந்து கடல் அலையில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.

ராட்சத அலையில் அடித்துச் சென்றதா?அப்போது, செளமியா கடல் அலையில் சிக்கி திடீரென மாயமானதால் பதற்றமடைந்த சுரேஷ் மற்றும் மணீஷ் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் செளமியாவை தேடினர். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற கோட்டகுப்பம் காவல் ஆய்வாளர்(பொறுப்பு) முத்துலட்சுமி மற்றும் போலீசார், செளமியா மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் ஒருபுறம் செளமியாவை தேடும் பணி தொடர்ந்தது.

இந்நிலையில், மாணவி செளமியாவின் உடல் கீழ்புத்துப்பட்டு எதிரே உள்ள கடல் பகுதியில் மிதப்பதாக மீன் பிடித்து வந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். நேற்று(புதன்கிழமை) அதிகாலை மாணவி சௌமியாவின் உடன் மரக்காணம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூனிமேடு பகுதியில் கரை ஒதுங்கியது. உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக பிம்ஸ்(PIMS) தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சௌமியா மாயமான நிலையில் சென்னையிலிருந்த ஜெயந்தியை கோட்டகுப்பம் போலீசார் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் சுரேஷ், ஒடிசாவைச் சேர்ந்த டாக்டர்.கணேஷ், மணீஸ் ஆகியோரையும் அழைத்து விசாரித்து அனுப்பி வைத்தனர். சௌமியாவின் பெற்றோர் வாரணாசியிலிருந்து புதுச்சேரி விரைந்துள்ளனர்.

மாணவியின் மரணத்தில் மர்மம்?இதற்கிடையில் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வரும் சௌமியாவின் சகோதரி அனுக்ரா சர்மா நேற்று கோட்டக்குப்பம் காவல் நிலையம் வந்து பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் "ஜெயந்தியின் மகன் சித்தார்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் சௌமியா மரணத்தை தொடர்புப் படுத்தி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்.

பெங்களூருவிலிருந்து சௌமியாவை ஏன் புதுச்சேரிக்கு ஜெயந்தி அழைத்தார்? ஆரோவில் பகுதியிலேயே சௌமியாவை தனியாக விட்டு விட்டு ஜெயந்தி ஏன் சென்னைக்கு அவசரமாக திரும்பினார். கடலில் குளிக்க சௌமியா ஆசைப்பட்டார் ஆனால் பக்கத்து அறையில் தங்கிய இரண்டு ஆண் நபர்கள் அங்கு சென்றது ஏன்? சௌமியா உடன் சேர்ந்து இரண்டு ஆண்கள் ஒன்றாக கடலில் குளித்துள்ளனர். சௌமியா மட்டும் எப்படி அலையில் அடித்துச் செல்லப்பட்டார்?" என அடுக்கடுக்கான புகாரை போலீஸிடம் அளித்துள்ளார்.

கோட்டக்குப்பம் போலீசார் அனுக்ரா சர்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயந்தி, சுரேஷ். டாக்டர் கணேஷ், மணீஸ் ஆகியோரிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே மாணவி சௌமியாவின் சாவுக்கு காரணம் என்ன என்பது தெரிய வரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவ முதுகலை சீட் வாங்கித் தருவாக ரூ.20 லட்சம் மோசடி.. முன்னாள் உதவிப் பேராசிரியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details