விழுப்புரம்:வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், தேர்தல் களத்தில் பிரச்சாரப் பணிகள் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.
அந்த வகையில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய ரவிக்குமாரை கடந்த முறை கிட்டத்தட்ட 1 லட்சத்து 28 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தீர்கள். கடந்த முறை நமது எதிரிகள் எல்லோரும் ஒன்றாக வந்தார்கள். இம்முறை அனைவரும் தனித்தனி அணியாக வந்துள்ளனர்.
அதனால் இந்த முறை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். அப்படி செய்தீர்கள் என்றால், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். அதாவது, மாதம் இரு முறை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு வந்து, உங்களது குறைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் எடுத்துச் செல்வேன்.
"நான் சொல்வதைத்தான் செய்வேன்" "செய்வதைத்தான் சொல்வேன்" ஏனென்றால் நான் கருணாநிதியின் பேரன். திமுகவில் இருக்கும் அனைத்து தொண்டர்களும், இளைஞர்களும் அவரின் பேரன் தான். பெரியாரின் பேரன் தான். அண்ணாவின் பேரன் தான்.