தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்! - mayiladuthurai

Thiruvengadu Suvedaranyeswarar Temple: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேரோட்டம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

Thiruvengadu Suvedaranyeswarar Temple
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 7:29 PM IST

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்

மயிலாடுதுறை:திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இது. சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். மேலும், புதனுக்கு உரிய ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.

இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட ஸ்தலமென்பது பக்தர்கள் நம்பிக்கை. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவபெருமான் அகோர மூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது.

இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய 3 குளங்களில் புனித நீராடி, சுவாமி அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எமபயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திரப் பெருவிழா, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, விழாவில் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இத்தேர்த் திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் என அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருளிய சாமிகளை, திரளான பக்தர்கள் நமச்சிவாய என கோஷமிட்டு, வடம் பிடித்து இழுத்தனர்.

முன்னதாக, தேரோட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பக்தர்களுடன் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதையடுத்து, திருத்தேர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.

இத்தேரோட்டத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்துள்ளதால், பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர். மேலும், இந்திர விழா ஏற்பாட்டினை கோயில் செயல் அலுவலர்கள் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நிறைவு நிகழ்வாக மார்ச் 3ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும், 13 நாள் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழாவானது நிறைவு பெறுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியின் பூர்வீக இல்லத்தின் எதிரில் கோயில் அமைந்துள்ளது. மேலும் இன்றைய விழா உபயதாரர் துர்கா ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details