மயிலாடுதுறை:திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இது. சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். மேலும், புதனுக்கு உரிய ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.
இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட ஸ்தலமென்பது பக்தர்கள் நம்பிக்கை. தேவாரப்பாடல் பெற்ற தலங்களில், சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவபெருமான் அகோர மூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது.
இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய 3 குளங்களில் புனித நீராடி, சுவாமி அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எமபயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திரப் பெருவிழா, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து, விழாவில் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் திருவிழாவில் திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இத்தேர்த் திருவிழா நடைபெறுவதற்கு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் என அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருளிய சாமிகளை, திரளான பக்தர்கள் நமச்சிவாய என கோஷமிட்டு, வடம் பிடித்து இழுத்தனர்.