சென்னை:தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறியதாக திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக மகளிர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா முன்னிலை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பா வளர்மதி, தமிழகத்தில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் அளவுக்கு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டுமென்றால், தமிழகத்தில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வரவேண்டும் என்றார். எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றால் தான் பெண்களுக்கான திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.