தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 3:08 PM IST

Updated : Feb 25, 2024, 5:32 PM IST

ETV Bharat / state

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; கைது செய்த ஆசிரியர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாகக் காவலர் மீது குற்றச்சாட்டு!

Chennai Secondary School Teacher Protest: சென்னையில் 7வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கைது செய்தவர்களிடம் காவலர் தரக்குறைவாகப் பேசியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

கைது செய்த ஆசிரியர்களிடம் தரக்குறைவாகப் பேசியதாகக் காவலர் மீது குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்து ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

ஜூன் 1 ஆம் தேதி நியமிக்கப்பட்டவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 200 எனவும் உள்ளது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைக் களையக் கோரிக் கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில், வரிசை எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்குச் சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கப்படும் என இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை இடம் பெற்றிருந்தது.

ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

அதன்படி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த முரண்பாட்டைக் களைந்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை பள்ளிக் கல்வி வளாகம் அருகில் கடந்த பிப்ரவரி19 ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 7வது நாளாக இன்று (பிப்.25) சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த ஆசிரியர்களைப் பேருந்துகள் மூலமாக மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர். பெண் ஆசிரியைகளைக் கைது செய்து அடைத்து வைத்த இடங்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, காவலர் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டுத் தரவா என கேள்வி எழுப்பியதாக ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், ஆசிரியர்களைத் தகாத வார்த்தையால் பேசிய காவலரைக் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயதாரணி! சபாநாயகருக்கு கடிதம்..

Last Updated : Feb 25, 2024, 5:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details