தூத்துக்குடி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள ஶ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்வதற்காக, தமிழக முன்னாள் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமான மூலம், நேற்று-ஞாயிற்றுக்கிழமை (நவ.24) தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களைச் சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது, “கடந்த மழை வெள்ளத்தில் ஆத்தூர் பாலம் சேதமடைந்தது. அவை தற்போது வரை சரி செய்யப்படவில்லை. மக்களுக்கான நல திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமா இருக்கும். திமுக ஆட்சியில், பள்ளி, மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகம் என அனைத்து இடங்களிலும் கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இதனை சட்டம் ஒழுங்கில் சேர்க்கக்கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். அப்படியென்றால் எவற்றை சட்டம் ஒழுங்கில் சேர்ப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். திராவிட கருத்துக்களை இளைஞர்களிடம் பதித்து மாவட்டம், மாவட்டமாக கலைஞருக்கு சிலை வைக்கின்றார்கள். சிலை வைப்பதற்கு பதிலாக மழைக்காலங்களில் மக்களை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்.
அதானி ஊழல் குறித்து தமிழ்நாடு அரசும் பதில் சொல்ல வேண்டும். பெரும்பான்மையான இந்தியா கூட்டணிகள் ஆளப்படும் மாநில அரசுகளும் பதில் சொல்ல வேண்டும். திருச்செந்தூரில் யானை மிதித்து 2பேர் உயிரிழந்ததற்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும். யானை தாக்கி பலியானால் ரூ.2 லட்சம் தான். தமிழகத்தில் அதிக நிதி பெற வேண்டும் என்றால் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்திருக்க வேண்டும்.