மதுரை:காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பல்வேறு விளைவுகளிலிருந்து பூமியை மீண்டும் இயற்கையின் சமநிலைக்கு கொண்டு வர 'மேய்ச்சலியம்' குறித்து உலகளவில் புரிதல் அவசியமானது என ஐ.நா. அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக 'தமிழ்நாடு மேய்ச்சலியம் 2024' மாநாடு மதுரை ஒத்தக்கடையிலுள்ள வேளாண் கல்லூரியில் நேற்று (அக்.18) தொடங்கி இன்று வரை நடைபெற்றது. இதில் அமைச்சர் பா.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. சேவா, நபார்டு, மதுரை வேளாண்மைக் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மாநாட்டை இணைந்து நடத்தின. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பசுமை செயல்பாட்டாளர்கள் மற்றும் சூழலியல் அறிஞர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மதுரையில் மேய்ச்சல் மாநாடு: இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மேய்ச்சல் சமூக மக்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமன்றி 'மேய்ச்சல்' குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளும் அறிஞர்களும், ஆய்வாளர்களும் கலந்து கொண்டு பேசினர். இதுகுறித்து தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பின் மாநில தலைவரும், தேசிய மேய்ச்சல் சமூக இளைஞர் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான ராஜீவ்காந்தி கூறுகையில், “தமிழக வரலாற்றில் மேய்ச்சல் சமூக மக்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என மூன்று தரப்பினரும் பங்கேற்கும் முதல் நிகழ்வு இது.
மேய்ச்சல் உரிமைச் சிக்கல்:இங்கு மேய்ச்சல் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு வகையான சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா முழுவதும் வாழக்கூடிய மேய்ச்சல் சமூக மக்கள் வனப்பகுதிகளுக்குச் செல்லும்போது எதிர்கொள்ளக்கூடிய மேய்ச்சல் உரிமைச் சிக்கல், பாரம்பரிய வன மேய்ச்சல் சட்ட உரிமைகள் குறித்து பேசப்பட்டன. தமிழகம் முழுவதும் உள்ள தோடர்கள், குரும்பாடு, கிடை ஆடு, மாடு, எருமைகளை வளர்க்கக்கூடிய மக்கள் அவர்களின் பிரதிநிதிகள் இங்கு பல்வேறு அமர்வுகளில் பேசினர்.
மேய்ச்சல் நல வாரியம் அமைத்தல்:இம்மாநாட்டின் முக்கியத் தீர்மானமாக மேய்ச்சல் சமூகத்திற்கென்று நல வாரியம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் எனவும் 2006 வன உரிமைச் சட்டத்தை மத்திய அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேய்ச்சல் சமூக மக்களுக்கான மனித உரிமைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மேய்ச்சலியம் குறித்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், சமூக மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.