தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசியல்வாதிகள் வயதானால் அனுபவத்தோடு செயல்படுவர்"..ரஜினி - துரைமுருகன் சர்ச்சை குறித்து அப்பாவு கருத்து! - Speaker Appavu - SPEAKER APPAVU

Speaker Appavu: வாழ்நாள் முழுவதும் அரசியல்வாதிகள் அவர்களது அனுபவங்களை தெரிவிக்க வேண்டும்.வயதானவர்கள் இளையவர்களாக நடித்தால்தான் அது நடிப்பு. ரஜினிகாந்த் இளமையாக நடித்தால் தான் நடிப்பு. பழுத்த பழம் ஆக ஆக அரசியலில் அனுபவத்தோடு செயல்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 8:40 PM IST

திருநெல்வேலி:பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியின் 166ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, “இந்தியாவில் அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்தோடு சர்வ ஷிக்ஷா அபியான் (SSA) திட்டம் கொண்டுவரப்பட்டது. அனைத்து மாநிலங்களிலும் ஆரம்ப நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சிக்காக இத்திட்ட நிதி வழங்கப்பட்டது. தற்போது ஒன்றிய அரசு அத்திட்டத்தை சமக்ரா சிக்ஷா அபியான் என பெயர் மாற்றியுள்ளது.

2021 முதல் அதற்கான நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் நிதியை வழங்க மறுக்கிறார்கள். இந்தியாவில் கல்வியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு அதிக மருத்துவப் பட்டதாரிகள் இருக்கிறார்கள். அதற்கு இடையூறு செய்வது போல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. புதிய கல்வி கொள்கையில் 2035க்குள் நாட்டில் 50 சதவீதம் பேரை பட்டதாரிகளாக ஆக்குவோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் 51 சதவீதம் பேர் பட்டதாரி ஆகிவிட்டார்கள். இந்தியாவிலையே தமிழகத்தில் தான் அதிகமாக 78 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் 11 ஆயிரத்து 500 மருத்துவ மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், புதிய கல்வி கொள்கை வந்தால் 7 ஆயிரத்து 500 பேர் தான் படிக்க முடியும். கலை கல்லூரிக்கும் நுழைவு தேர்வு கொண்டு வருவோம் என்று கூறுகின்றனர். அது போன்ற நிலை வந்தால் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டி இருக்கும்.

ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களின் தந்தை தொழிலுக்கு செல்லும்படி கூறுகிறார்கள். இது முன்னாள் முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி கொள்கையை ஊக்குவிப்பது போல் இருக்கிறது. ஆவணங்கள் கொடுக்காததால் எய்ம்ஸ் மெட்ரோ திட்டம் உள்பட மத்திய அரசின் திட்டங்களுக்கு, நிதி வழங்காமல் இருப்பதாக மத்திய அமைச்சர்கள் கூறியது உண்மையானால் அது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு நிர்வாக கட்டமைப்போடு செயல்படும் அரசின், தலைமைச் செயலாளர் இது போன்ற நிதிகளைப் பெற ஆவணங்களை கொடுக்காமல் எப்படி இருப்பார்” என்றார்.

வயதானவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்க வேண்டும் என்று நடிகர் ரஜினி கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அலித்த அவர், “வாழ்நாள் முழுவதும் அரசியல் வாதிகள் அவர்களது அனுபவங்களை தெரிவிக்க வேண்டும். வயதானவர்கள் இளையவர்களாக நடித்தால் தான் அது நடிப்பு. ரஜினிகாந்த் இளமையாக நடித்தால் தான் நடிப்பு. அரசியல்வாதிகள் பழுத்த பழம் ஆக ஆக அரசியலில் அனுபவத்தோடு செயல்படுவார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:புறப்பட்டாரா ஸ்டாலின்? அமெரிக்காவில் 17 நாட்கள்.. முதல்வர் பயணத்தை உற்றுநோக்கும் எதிர்க்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details