தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையில் ரூ.1.5 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்.. ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் கைது! - Chennai International Airport

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 9:38 AM IST

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலையம் கோப்புப்படம்
சென்னை விமான நிலையம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றைய முன்தினம் (செப்.09) நள்ளிரவு வந்த துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் தீபக் (30) என்பவரும் அவருடன் சேர்ந்து மற்றோறு ஒப்பந்த ஊழியரும் கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளிக் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்கள் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரையும் நிறுத்தி விசாரித்துள்ளனர். அதோடு, கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அந்த கருவிகளுக்குள் 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளை அதிகாரிகள் எடுத்து பிரித்துப் பார்த்தபோது அதற்குள் தங்கப் பசைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தமாக மூன்று பார்சல்களிலும் 2.2 கிலோ தங்க பசை இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி என்றும் கண்டறியப்பட்டது. அதனை அடுத்து ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உட்பட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:கோவை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

இந்த முதற்கட்ட விசாரணையில், துபாயில் இருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர் இந்த தங்கம் பசை அடங்கிய பார்சல்களை கடத்திக் கொண்டு வந்து சென்னை விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, அவர் மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்று விட்டார் என்று தெரியவந்துள்ளது.

மேலும், அந்த கடத்தல் பயணி விமான நிலைய ஒப்பந்த ஊழியரான தீபக்கிடம் இது குறித்து ஏற்கனவே கூறியிருந்ததால், தீபக் தனது வழக்கமான காலை பணி நேரத்தை, இரவு பணி நேரமாக மாற்றி அமைத்துக் கொண்டு முன்னதாகவே பணிக்கு வந்து, கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்து சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் செல்ல முயன்றபோதே பிடிபட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் தீபக் என்பவரும் அவருடன் சேர்ந்து மற்றோறு ஒப்பந்த ஊழியரையும் கைது செய்து, சென்னை தியாகராய நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

ABOUT THE AUTHOR

...view details