தமிழ்நாடு

tamil nadu

4 நாளாக தொடரும் ஊழியர்கள் போராட்டம்.. "பண்டிகை நேரத்தில் இப்படியா" - கடுப்பான சாம்சங் நிர்வாகம்! - Samsung factory workers strike

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 1:13 PM IST

ஊதிய உயர்வு 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000க்கும் மேற்பட்டோர் நான்காவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் (credits - ETV Bharat Tamil Nadu)

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது, இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அதில், 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் பணி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டு, சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை முதல் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் நான்காவது நாளாகக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: “குவாரிகளுக்கு சட்டவிரோத அனுமதியை கண்டித்து போராட்டம்”- சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் அறிவிப்பு!

முன்னதாக, தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் நேற்று முன்தினம் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் போராட்டம் குறித்து, தொழிலாளர் துறை துணை ஆணையர் கமலக்கண்ணனிடம் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடைசி வரை தொழிற்சங்கத்திற்குத் தொழிற்சாலை நிர்வாகம் அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

மேலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் எனத் தொழிலாளர் துறை ஆணையர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளதன் தொடர்ச்சியாக தற்போது 4-வது நாளாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில், சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் சாம்சங் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு நெருக்கடியைத் தந்துள்ளதாகத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது சாம்சங் தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details