சென்னை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். இது தொடர்பாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், மூத்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, இவ்விழாவில் உரையாற்றிய ரஜினிகாந்த், “சமீபத்தில் அரசியலுக்கு நுழைந்து தன் கடின உழைப்பால் மக்கள் மத்தியில் அன்பைப் பெற்று, அரசியலில் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிப்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அறிவாளிகள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பதே அறிவாளித்தனம். கலைஞரின் நூற்றாண்டு விழாவை திமுகவினர் கொண்டாடியது போல், எந்த அரசியல் தலைவருக்கும் இப்படி ஒரு நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்க முடியாது.
கருணாநிதியுடன் இருந்த மூத்த அமைச்சர்களை சமாளிப்பது கடினம். துரைமுருகன் போன்றோர் கருணாநிதியின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர்கள். அவர்களை வைத்து வேலை வாங்குவது, ஸ்டாலின் சார் ஹேட்ஸ் ஆஃப் யூ” என்ற பேச்சால் கலகலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், “கலைஞர் நினைவிடம் தாஜ்மஹால் மாதிரி கட்டியுள்ளனர். அதேபோல், திருவாரூரில் கலைஞரின் கோட்டம் மிக சிறப்பாக கட்டியுள்ளனர். இந்த பணிகளை மேற்கொண்ட எ.வ.வேலு புத்தகத்தையும் மிக அருமையாக எழுதியுள்ளார். புத்தகங்களின் விலையைக் குறைத்து வைத்தால் எல்லோரும் வாங்கி படிப்பார்கள்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கருணாநிதி குறித்து அரை மணி நேரம் பேசினார் என்றால், அவராக பேசியிருக்க மாட்டார். மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்கும். விமர்சனங்களை கருணாநிதி எப்படி எடுத்துக்கொள்வார் என்றால், அனைத்தையும் ஆராய்ந்து பார்ப்பார்.
தரம் குறைந்தவர் எழுதினால் அதனை கண்டுகொள்ள மாட்டார். அறிவார்ந்தவர்கள் எழுதினால் ஆராய்வார், விளக்கிக் கூறுவார். விமர்சனம் செய்யுங்கள் யாரையும் நோகடிக்காதீர்கள். இப்போது இருப்பவர்கள் யாரும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை. ஆனால், கருணாநிதி பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே மகிழ்வார். கருணாநிதிக்கு பத்திரிகையாளர்களைச் சந்திப்பது யானைக்கு கரும்பு கிடைத்தது போன்றது.
முரசொலி மாறன் மருத்துவமனையில் அனுமதித்த போது மற்றும் வீரப்பன், கன்னட நடிகத் ராஜ்குமார் கடத்திய நேரத்தில் மட்டும் தான் கருணாநிதி சோகமாக இருந்ததைப் பார்த்தேன். லஞ்சத்தை மையப்படுத்தி எடுத்த சிவாஜி படத்தை பார்த்து நல்லது செய்ய வேண்டும் என பெருமூச்சு விட்டார். அந்த பெருமூச்சில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த படத்தின் வெற்றி விழாவிற்கு நான் வருவேன் என தைரியமாகக் கூறி வந்து வாழ்த்தியவர் கருணாநிதி” என்றார்.