மதுரை:"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி".. அதாவது, பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது. அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்ப சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும் என்ற திருக்குறளுக்கேற்ப மதுரையில் மனம் நெகிழ வைக்கும் ஒரு சம்பவத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிகழ்த்தியுள்ளார்.
அதாவது, தமிழ்நாடு அரசு ஏழை எளிய பள்ளி மாணவர்களின் பசியை போக்குகிற வகையில், காலை உணவுத் திட்டத்தை நிறைவேற்றி அதனை தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மதுரையில் பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' 2ஆம் கட்டத்தை மதுரை முத்துப்பட்டி கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு பயிலும் மாணவர்களோடு உணவருந்தி மகிழ்ந்த அமைச்சர், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிலரை அழைத்து உரையாடினார்.
அப்போது, பேசிக் கொண்டிருக்கும்போதே, 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் தனக்கு "தலை வலிக்கிறது.. மயக்கம் வருகிறது" எனக் கூறினார். உடனடியாக அந்த மாணவனைத் தனியாக அமரச் செய்த அமைச்சர் பிடிஆர், அவனுக்கு இனிப்பும், உணவும் வழங்கிடச் சொன்னார். அதனைத் தொடர்ந்து, மாணவனிடம் உரையாடி குடும்ப சூழ்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.
"நீ நல்லா சாப்பிடு.. நான் சைக்கிள் வாங்கி தரேன்":அப்போது, மிகவும் மெலிந்த தேகமுடைய மாணவனின் உடல்நிலையைக் கண்ட அமைச்சர், மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென ஆசிரியர்களிடமும் அவரது அலுவலக பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். அந்த அறிவுறுத்தலின் பேரில், ஒட்டுமொத்தமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது. மாணவன் விஷ்ணுவின் இரத்தப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் ரிசல்ட் அடிப்படையில், அவன் உடல் எடை மிகவும் குறைந்து இருந்ததும், மேலும் உணவு உண்பதில் அவனுக்கு சிரமம் இருந்ததும் தெரிய வந்தது.