தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை.. மயிலாடுதுறை மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..! - Mahabharathi IAS - MAHABHARATHI IAS

மயிலாடுதுறையில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தினால் எவ்வித முன்னறிவிப்புமின்றி அனைத்து நலத்திட்ட உதவிகளும் ரத்து செய்யப்பட்டு மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இ.ஆ.ப
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இ.ஆ.ப (Credits - ETV Bharat Tamil nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 10:53 AM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மீனவர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் 2000-வது ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தினசரி நாளிதழ், அறிவிப்பு கடிதம் மற்றும் பல கூட்டங்கள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்டும் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்ட தொடர் அறிவுறுத்தலுக்கு பிறகும் சட்ட விதிகளுக்கு கட்டுப்படாமல் சுருக்குமடி வலையினை படகில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

ஆகவே, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும், ஒட்டு மொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலை தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து மயிலாடுதுறை மாவட்ட கடல் பகுதியிலும் மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இதையும் படிங்க:30க்கும் மேற்பட்ட மயிலாடுதுறை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

அத்துடன், படகில் ஏற்றி வைத்திருக்கும் சுருக்குமடி வலையினை அகற்றவும், மீனவர்கள் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீன்பிடி துறைமுக வளாகத்தில் வைத்திருக்கும் சுருக்குமடி வலைகள் அனைத்தையும் அகற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வறிவுரைகளை மீறி யாரேனும் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ, உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி சுருக்குமடி வலையை பயன்படுத்தும் படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும்.

மேலும், இவ்வகையான மீன்பிடிப்பில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் மீனவர்கள் மீது உரிய சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுமட்டும் அல்லாது, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details