தாமரையை சாப்ட்டாச்சு, இரட்டை இலையை மென்னாச்சி, பலாப்பழம் ஜெயிச்சாச்சு வேலூர்:மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சென்று மாநாடு நடத்தலாம், ஆனால் அங்கெல்லாம் செல்லாமல், நான் தேர்தலில் நிற்பதால் பிரதமர் மோடி வேலூருக்கு வருகிறார், என இன்று (ஏப்.06) வேலூர் மண்டி தெரு பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்த மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பில் மன்சூர் அலிகான் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வேலூர் மண்டி தெரு பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் அவர் தனது பிரச்சாரத்தைத் துவக்கினார்.
அப்போது அவர் அந்த பகுதியில் இருந்த அனைத்து கடைகளுக்கும் சென்று, வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். மேலும் இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு, அனைத்து பகுதிகளுக்கும் சென்று வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் பூக்கடையிலிருந்த தாமரைப் பூவையும் துளசி இலையையும் வாங்கி வாயில் போட்டுக்கொண்டு ‘‘தாமரையை சாப்பிட்டாச்சு.. இரட்டை இலையை மென்னாச்சு.. பலாப்பழம் ஜெயிச்சாச்சு..’’, என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வேலூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நான் தனியாகத்தான் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தேன். பின்னர் என்னிடம் சிலர் ஆதரவு கொடுப்பதாகக் கூறினர், ஆனால் அனைத்து இடங்களிலும் திமுக குறித்து அவதூறாகப் பேசி வந்தனர், ஆனால் அதிமுக பற்றி அவர்கள் எதுவும் பேசவில்லை.
இது குறித்து விசாரித்த போது, அதிமுக இவர்களை விலைக்கி வாங்கிக்கொண்டு தன்னிடம் அனுப்பி வைத்திருப்பது தெரிய வந்தது. இது போன்ற துரோகம் நடந்ததால் எனக்கு யாரும் வேண்டாம், நான் மக்களுடன் கூட்டணி, எனக்கு மக்கள் இருக்கிறார்கள், நான் மக்களுடன் இணைந்து வேலூர் பகுதியில் போட்டியிடுகிறேன், என்னை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது”, என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கி விட்டனர் அதிமுகவினர், வேப்பங்குப்பம் பகுதியில் நேற்று நான் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது நான் இல்லாத நேரத்தில் அதிமுகவினர் அவதூறாகப் பேசியுள்ளனர், அவர்கள் மீது வழக்கு தொடர உள்ளேன். காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நான் வரவேற்கிறேன். அருணாச்சல பிரதேசத்தைச் சீனா பாதி ஆக்கிரமித்துவிட்டார்கள், கோழை பிரதமர் வாயைத் திறக்க முன்வரவில்லை”, என சாடியுள்ளார்.
தமிழகத்திற்கு மோடி வருவது குறித்த கேள்விக்கு, “நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் பிரதமர் மோடி வருகிறார். மணிப்பூர் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் சென்று மாநாடு நடத்தலாம், ஆனால் அங்கெல்லாம் செல்லாமல் இங்கு நான் தேர்தலில் நிற்பதால் பிரதமர் மோடி வருகிறார்”, என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணைச் சபாநாயகர் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதம்: வாக்கு சேகரிக்காமல் திரும்பிச் சென்றதால் பரபரப்பு! - Lok Sabha Election 2024