மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை கோட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில் 8 பேர் பலியான நிலையில், 6 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இந்த ஆண்டில் கடந்த ஆறு மாதங்களில் ரயில் படிக்கட்டில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்து ஓடும் ரயிலிலிருந்து கீழே விழுந்து 41 பேர் உயிரிழந்ததுடன் 43 பேர் காயமடைந்துள்ளனர்.
ரயில் நிலையங்களில், 'படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம்' என விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொது அறிவிப்புகள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்த போதிலும், பயணிகள் படிக்கட்டுகளில் நின்று கொண்டும், உட்கார்ந்து கொண்டும் பயணம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இந்த விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவு முதல் அதிகாலை நேரங்களில் நடைபெறுகிறது.
படிக்கட்டில் பயணம் செய்யும் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் கீழே விழுவது அதிகரித்து வருகிறது. ரயில் படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்பவர்களது கால்கள் ரயில் நிலைய நடைபாதைகளில் மோதியும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பெரும்பாலும் இளைஞர்களே பயணம்: படிக்கட்டு பயணத்தால் அதிகபட்சமாக விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி இடையே 66 பேரும், மதுரை - திண்டுக்கல் இடையே 44 பேரும், விருதுநகர் - செங்கோட்டை இடையே 43 பேரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும்பாலும், பாதிப்படைந்தவர்கள் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர். பாதிப்படைந்தவர்களில் 87 சதவீதம் ஆண்களும் 13 சதவீதம் பெண்களும் உள்ளனர்.