சேலம்:சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெற்ற புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அங்கு உணவு வகைகள் வீணாக்கப்பட்டது என்று பத்திரிகைகள் ஊடகங்கள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனால் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டில் உணவு வகைகள் வீணாக்கப்பட்டது குறித்து ஊடகங்கள் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரவில்லை. மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக்காட்டுவது ஊடகங்களின் பணி. அதைக் காட்டாமல் விட்டது உங்கள் தொலைக்காட்சிகளுக்குத் தான், அதன் நிறுவனங்களுக்குத் தான் இழப்பு.
திமுக ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை அந்த மாநாடு எடுத்துக்காட்டியுள்ளது. ஆங்காங்கே அமர்ந்து சீட்டு ஆடுவது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்தது. ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய அந்த அஞ்சல் அட்டைகள் குவியல் குவியலாக மாநாட்டுப் பகுதியில் வீசப்பட்டு உள்ளன. அந்த காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.