சென்னை:தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பின்வருமாறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, தாளவாடி (ஈரோடு), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2 செ.மீ, சோலையார் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ அளவில் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை: தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழகக் கடலோரப் பகுதிகளில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 42.2 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 41.0 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.8 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.6 டிகிரி செல்சியஸ், மதுரை விமானநிலையம் & திருப்பத்தூரில் 40.2 டிகிரி செல்சியஸ் மற்றும் திருத்தணியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகக் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.8 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டலக் கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. ஆகவே, இன்று (ஏப்.22) முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.