விழுப்புரம்:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் TN-Alert செயலியினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த செப்.30ஆம் தேதி வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் செயலி தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கான TN-Alert என்னும் கைப்பேசி செயலியை, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வெளியிட்டார்.
TN-Alert செயலி:தமிழ்நாட்டில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக, மழைவெள்ளத்தை முன்கூட்டியே எளிதாக தெரிந்து கொண்டு முன்னேற்பாடுகளை செய்யும் வகையில், தமிழக அரசு டிஎன் - அலர்ட் (TN-Alert App) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பொதுமக்கள் எளிய முறையில் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:‘களஞ்சியம்’ செயலியால் தீபாவளி முன்பணம் பெற முடியவில்லையா? அரசு ஊழியர்கள் கடிதம்!
செயலியின் வசதிகள்:இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் தம் இருப்பிடம் சார்ந்த வானிலை மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகளை தமிழிலேயே அறிந்துகொள்ளலாம். இந்த செயலியில் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, மழைமானி வாரியாக தினசரி பெறப்பட்ட மழை அளவு, நீர்த்தேக்கங்களில் தற்போதைய நீர் இருப்பு விவரம், தங்களது இருப்பிடம் வெள்ள அபாயத்துக்கு உட்பட்டதா என்பது போன்ற தகவல்களை அறியும் வசதி உள்ளது.
மேலும், பேரிடர் மற்றும் கனமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துரித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிடர் குறித்த வானிலை முனனெச்சரிக்கையினை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள உதவும் TN– Alert செயலியை, Google Play Store மற்றும் IOS App Store–ல் இருந்து பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயனடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எந்தப் பகுதியில் மழை வெள்ளம் இருக்கும் என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்துகொள்ளலாம் என்பதால், TN– Alert செயலியினை பதிவிறக்கம் செய்து பொதுமக்கள் பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்