தமிழ்நாடு

tamil nadu

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்.. உடலை வீட்டுக்குள் அனுமதிக்காத ஹவுஸ் ஓனர் - கருணாபுரத்தில் சோகம்! - Kallakurichi illegal liquor issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 11:11 AM IST

Updated : Jun 21, 2024, 12:19 PM IST

Kallakurichi Illegal Liquor Issue: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கிற்கு, வீட்டின் உரிமையாளர் வீட்டிற்குள்ளேயே அனுமதிக்காத சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் கோட்டைமேடு பகுதியில் கடந்த 18ஆம் தேதி இரவு கள்ளச்சாராயம் வாங்கி குடித்த பலருக்கு வயிற்று வலி, கண்பார்வை இழப்பு உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட நபர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், கர்ணாபுரம் கிராமத்தில் மட்டும், தெருவுக்கு ஒரு நபர் என பலர் உயிரிழந்துள்ளனர்.

அந்த வகையில், கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார், இவர் பூக்கடையில் தினக்கூலி ஊழியராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களில் மனோஜ் குமாரும் ஒருவர். தற்போது மனோஜ் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்திருந்த மனோஜ் குமாரின் தந்தை சிறு வயதில் இறந்து விட்டார், மேலும், அவருடன் பிறந்த தம்பி, தங்கையும் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அவருடைய தாய் புஷ்பாவுடன் வசித்து வந்த மனோஜ் குமார் கள்ளச்சாராயம் அருந்தி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கணவர் இறந்த பின் வறுமையில் குடிசையில் வசித்து வந்த மனோஜ் குமார் மற்றும் அவருடைய தாய் புஷ்பா, கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஷாஜகான் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர். தற்போது, கள்ளச்சாராயத்தால் நேற்றைய தினம் உயிரிழந்த மனோஜ் குமார் உடலை, வீட்டு உரிமையாளர் ஷாஜகான் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், மனோஜ் குமார் உடலுக்கு வீதியில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு, தகனம் செய்யப்பட்ட நிகழ்வு கருணாபுரம் பகுதியில் மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 50 பேர் பலி; 115 பேருக்கு தொடர் சிகிச்சை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Last Updated : Jun 21, 2024, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details