தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்பது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துயரத்தை கொட்டிய சிறுமிகள்.. கோவையில் அதிர்ச்சி! - coimbatore teacher sexual assault - COIMBATORE TEACHER SEXUAL ASSAULT

coimbatore school teacher sexual assault: கோவை அரசு பள்ளி மாணவிகள் 9 பேருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில், இதனை மறைத்த நான்கு பெண் ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கோவை அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
கோவை அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2024, 12:24 PM IST

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

மேலும், இதுபோன்று யாராவது பாதிக்கப்பட்டால் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அப்போது, அப்பள்ளியில் 7,8,9ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் தங்களிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஒருவர் பாலியல்ரீதியில் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுகுறித்து வகுப்பு ஆசிரியர் உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை. பட்டதாரி ஆசிரியை உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா கொடுத்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் ரபீனா மரியம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில், அப்பள்ளியில் பயிலும் 7,8,9 ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் சம்பந்தப்பட்ட இடைநிலை ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததும், இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை, பிற ஆசிரியைகள் உள்ளிட்டோர் போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை, பிற ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொண்டாமுத்தூர் பகுதியிலும் இதேபோன்று அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டதும், ஆசிரியருக்கு உதவியாக இருந்த சக ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கிருஷ்ணகிரி பள்ளி சிறுமிகள் பாலியல் தொல்லை விவகாரம்.. சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று முதல் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details