தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதா? ஈபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் கேள்வி! - MINISTER DURAIMURUGAN

தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, சென்னையில் வெள்ளத்தால் அதிக இடங்கள் பாதிக்கப்படவில்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன்
எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2024, 6:35 PM IST

சென்னை:சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள முகத்துவாரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வின்போது அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர் கூறியதாவது, "பொதுவாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளம் பாதிப்பால் சென்னை மாநகரம் பாதிக்கப்படுவது உண்டு.

அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று எல்லாத் துறைகளுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அறிவுறுத்தலோடு நிற்காமல் அந்தந்த துறை செய்யக்கூடிய பணிகளுக்கு நிதியையும் முதலமைச்சர் ஒதுக்கினார்.

அமைச்சர் துரைமுருகன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதில் எங்கள் துறைக்கு (நீர்வளத்துறை) 38.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் 179 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் சில பணிகள் முடிவுற்றுள்ளன. இதனால் இந்தாண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரில் வெள்ளத்தால் அதிக இடங்கள் பாதிக்கப்படவில்லை.

குறிப்பாக சென்னையில் வெள்ள நீர் கடலில் கலக்க வேண்டும் என்றால் மூன்று இடங்கள்தான் இருக்கிறது. ஒன்று கூவம் வழியாகவும், அடையார் வழியாகவும் எண்ணூர் வழியாகவும் கடலில் கலக்க வேண்டும். ஆனால் போதிய நீர் வழித்தடம் இல்லாத காரணத்தால் கடந்த காலங்களை நிறையப் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க:தஞ்சை டூ ஆந்திரா.. மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் 13 வருடங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைந்த நபர்!

இதனைத் தொடர்ந்து கூவம் முகத்துவாரத்தில் வருடம் முழுவதும் நிரந்தரமாகத் திறந்திருக்கும்.எந்த வெள்ளம் வந்தாலும் பாதிப்பு இல்லாத அளவுக்கு தூண்டில் வளைவு 70 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மழை வெள்ளம் வடிந்து கொண்டிருக்கிறது" என்றார்.

மேலும் எண்ணூர் அடையாறு போன்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த முறை வெள்ள பாதிப்பு குறைந்து இருக்கிறது. அதே போல் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காக மண்டல வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மழை தடுப்பு பணிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறாரே என்ற கேள்விக்கு, "பத்திரிக்கை செய்தியில் கருப்பு மையால் வரும் அறிக்கையே போதும். எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கையா? கூவம் ஆற்றை திமுக சீரமைப்பு செய்து வருவது போன்று அதிமுக செய்ததா? என கேள்வி எழுப்பிய அவர், இதுபோன்று நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை திமுக செய்துள்ளது" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details