தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து வைக்க வேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்! - Premalatha Vijayakanth - PREMALATHA VIJAYAKANTH

Premalatha Vijayakanth: அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் , விஜய்
பிரேமலதா விஜயகாந்த், விஜய் (Photo Credits - ETV Bharat Tamil Nadu, VP 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2024, 4:35 PM IST

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் 71 ஆண்டுகள் நிறைவானதைக் கொண்டாடும் வகையில், 71 டாட்டூ (Tattoo) கலைஞர்களால், 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்தின் முகம் வலது கையில் டாட்டூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்தச் சாதனை கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது. இதனை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், “நாளை கேப்டனின் 72வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, டாட்டூ போடும் நிகழ்வு நடைபெறுகிறது. கேப்டன் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், நாளை தேமுதிக அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. கேப்டன் இல்லாத முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அவர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மன வலியோடு இதைக் கொண்டாடுகிறோம்” என்றார்.

விஜய் கட்சிக் கொடி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகத்திற்கு முன்பாக வீட்டிற்கு வந்து கேப்டனுக்கு மரியாதை செலுத்தி, கேப்டனின் ஆசிர்வாதத்தை வாங்கிச் சென்றார். தற்போது அவரது கட்சிக் கொடி வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விஜய்க்கு தேமுதிக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

கொடியில் இருக்கும் சின்னம் சர்ச்சையானது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் என்றாலே சர்ச்சைகள்தான். அந்த சர்ச்சைகளை, சவால்களை முறியடித்து தான் வெற்றி பெற முடியும். இதுபோன்று பல சர்ச்சைகளை, சவால்களைச் சந்திக்க வேண்டிது தான் அரசியல். விஜய் புத்திசாலி, அமைதியான பையன், நிச்சயமாக இவற்றையெல்லாம் சமாளிப்பார் என்று நம்புகிறேன்.

திரை உலகில் நிறைய சவால்களைச் சந்தித்து வெற்றி பெற்று இருக்கிறார். அரசியலை சினிமா போன்று எடுத்துக் கொள்ள முடியாது. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் யோசித்து எடுத்து வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

விஜய் உடனான சந்திப்பு 2026 கூட்டணிக்கான முன்னெடுப்பா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இது நட்புணர்வோடு நடைபெற்ற ஒரு சந்திப்பு. விஜய் எங்கள் வீட்டிற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. உங்களுக்கு புதிதா என்று தெரியவில்லை. சாலிகிராமத்தில் எங்கள் வீட்டின் பக்கத்தில்தான் இருந்தார். கேப்டனுக்கும், எஸ்ஏசி சாருக்கும் உள்ள நட்பு என்ன என்பது இந்த உலகத்திற்கு தெரியும். எனவே, விஜய் வீட்டிற்கு வருவது இப்போது ஒன்றும் புதுசு அல்ல.

விஜய் எப்போதும் எங்கள் வீட்டு பிள்ளை மாதிரிதான் வந்தார். மேலும், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியனோடு அவர் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எனது மகன் சண்முகப்பாண்டியன், நீங்கள் தான் எங்களுக்கு சினிமாவில் முன்னுதாரணம் என்று விஜய் இடம் கூறினார். அப்பொழுது அரசியலில் எனக்கு விஜய பிரபாகரன் தான் சீனியர் என்றும் பத்திரிகையை நன்றாக சமாளிக்கிறீர்கள் என்றும் கூறினார். ஒரு குடும்ப சந்திப்பு போன்று தான் அது அமைந்தது.

மேலும், கோட் திரைப்படத்தில் ஏ ஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் வருகிறார் என்பதை வெங்கட் பிரபு ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறார். அந்த வகையில் அவர்கள் நேரில் வந்து கேப்டனை திரைப்படத்தில் பயன்படுத்த அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்து சென்றனர். கேப்டன் வரும் காட்சி மிகப் பிரம்மாண்டமாக வந்துள்ளதாக விஜய் மகிழ்ச்சியாக கூறினார். திரைப்படம் வெளியானதும் நீங்கள் குடும்பத்தினரோடு வந்து படம் பார்க்க வேண்டும் என்றும் உங்களுக்கென சிறப்புக் காட்சியை வைத்துள்ளேன் என்றும் கூறினார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:இயக்குநர் நெல்சன் வீட்டுக்கு விரைந்த தனிப்படை போலீஸ்; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

ABOUT THE AUTHOR

...view details