தென்காசி:"குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், பக்தர்கள் எளிதாகச் சென்று வரக்கூடிய பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது நாதகிரி முருகன் கோயில். அப்படி சிறப்பு வாய்ந்த திருநாதகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்திற்குட்பட்ட கூடலூர் கிராமத்தில் உள்ள மலை மீது அமைந்துள்ளது.
கூடலூர் முருகன் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் நாள்தோறும் 3 வேளை பூஜையும், மதியம் அன்னதான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரம், செடி, கொடி என கோயிலைச் சென்றடையும் முன்னரே அங்குள்ள பசுமைக் காட்சிகள் பக்தர்கள் மனதை பாதி அமைதிப்படுத்துவதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி, பல்வேறு சித்தர்கள் வழிபட்டிருப்பதாகவும், 2 பெண் சித்தர்கள் ஒடுக்கமும் அமைந்துள்ளது இக்கோயிலுக்கு கூடுதல் சிறப்பைத் தருகிறது. அவ்வப்போது சித்தர்கள் மலைமேல் அமர்ந்து திருக்காட்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக பக்தர்கள் கிரிவலம் சென்று முருகனை வழிபடும் வண்ணம் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் கிரிவலத்தன்று பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், மாதந்தோறும் நடக்கும் கார்த்திகை பூஜையின் போது நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அன்றைய தினம், பல்வேறு அமைப்பினர்களால் காலை முதல் இரவு வரை அன்னதானம் நடைபெறும்.