திருப்பத்தூர்: வாணியம்பாடியில் உள்ள ஜீவா நகர், நேதாஜி நகர், புதூர், ஷாகிராபாத், பஷீரா பாத், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போவதாக வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு புகார்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆடு கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வந்தனர்
இந்நிலையில் குற்றவாளிகள் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்த போதும், மனம் தளராமல் ஆடுகளை பறிக்கொடுத்த ஜீவா நகர் பகுதி மக்கள், ஒன்றிணைந்து ஒரு குழு அமைத்து வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆட்டு சந்தையில் தினந்தோறும் சென்று பார்த்து தங்களது ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதா? என கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் அதிகமாக வரும் என வியாபாரிகள் தெரிவித்ததால் ஜீவா நகர் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு இரவோடு இரவாக கே.வி.குப்பத்தில் உள்ள ஆட்டு சந்தையில் காத்திருந்த போது விடியற்காலை 4 மணிக்கு முதலாவதாக ஆடுகளை ஏற்றி வந்து தம்பதி விற்பனை செய்ய தொடங்கினர்.
அப்போது அங்கிருந்த ஜீவா நகர் பகுதி மக்கள் ஆட்டை வாங்குவது போல் சென்று வியாபாரம் பேசி உள்ளனர். இரண்டு ஆடுகள் 25 ஆயிரம் ரூபாய் என விலை பேசத் தொடங்கியுள்ளனர். அந்த தம்பதியினர் கொண்டு வந்த ஆடுகள், ஜீவா நகர் பகுதியை சேர்ந்தது என்பது தெரியவந்தது.