தமிழ்நாடு

tamil nadu

பள்ளிக்கல்வித்துறையின் புதிய வழிகாட்டுதல் படி மாவட்ட ஆட்சியர்கள் செயல்படத் தலைமைச் செயலாளர் உத்தரவு! - TN School Education Department

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 10:38 PM IST

Chief Secretary Shiv Das Meena: பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக் கல்வி இயக்ககம் கோப்புப்படம்
பள்ளிக் கல்வி இயக்ககம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில், "மாவட்ட அளவில் கல்விக்குறித்த மேம்பாட்டு ஆய்வுகளை நடத்துவதற்கும், மதிப்பீடுகளை ஆய்வு செய்யவும் பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் கல்வியின் தரத்தை முறையாக மேம்படுத்தவும், விரிவான சீர்திருத்தங்கள் மூலம் சமூக மேம்பாட்டை ஏற்படுத்தவும், மாநிலத்தின் நோக்கத்துடன் இணங்கவும் வடிவமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி மறு ஆய்வுக்கான புதிதாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை போன்ற அமைப்புகளின் ஆய்வுக் கூட்டங்களைப் போன்று, மாவட்டக் கல்வி மதிப்பாய்வு மாதந்தோறும் நடத்தப்படும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்ற முறையில், மதிப்பாய்வில் முக்கியப்பங்கு உள்ளது.

மேலும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைப்பின் மூலம் தற்போதுள்ள கல்வி முறைகளை முழுமையாகப் பெற்றிருப்பதையும், முழுமையாக அறிந்திருப்பதையும், எதிர்காலத்தின் கல்வித் தேவைகளை மாற்றியமைக்கும் வகையில் மேம்படுத்துவதையும் உறுதி செய்யும். மதிப்பாய்வு மூன்று முதன்மைக் கருப்பொருள்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளியின் உட்கட்டமைப்பின் படி மதிப்பீடு செய்தல், பராமரித்தல், தேவையான பள்ளி வசதிகளை உருவாக்குதல் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும். இது தொடர்பாக, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் போன்ற தொடர்புடைய துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும்.

போக்குவரத்து, சத்துணவுத் திட்டங்கள், சுகாதார சேவைகள், கொள்கை ஒருங்கிணைப்பு போன்றவை கல்வி தொடர்பான சேவைகள் மற்றும் சிக்கல்களில் அடங்கும். இது சம்பந்தமாக, காவல்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், சமூக நலன் போன்ற தொடர்புடைய துறைகளுடன் ஒத்துழைப்பது இன்றியமையாதது.

பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் செயல்திறன் மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியையும் கற்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பகுதிகளில் பின்வருவன அடங்கும்:

  • மாணவர்கள் சேர்க்கை
  • மாணவர்களின் வருகை கண்காணிப்பு
  • பள்ளி செல்லாத குழந்தைகள்
  • மாணவர்களின் வருகை
  • கம்ப்யூட்டர் ஆய்வகம், தகவல் தொழில்நுட்ப வசதிகள்
  • மாணவர்களின் கற்றல் மதிப்பீட்டுச் செல்
  • 10, 11, 12 மாணவர்களுக்கான சிறப்பு மதிப்பீடுகள்
  • பள்ளிப்பார்வை என்ற செயலியில் வகுப்பறை கண்காணிப்பு
  • 'எண்ணும் எழுத்தும்' திட்டம்
  • 'இல்லம் தேடி கல்வி' திட்டம்
  • வானவில் மன்றம், கணக்கு அறிவியல் மன்றம், அறிவியல் கண்காட்சி
  • வாசிப்பு இயக்கம்
  • முன்னாள் மாணவர்களின் பங்களிப்பான 'விருதுகள்'

மாவட்டக் கல்வி மறு ஆய்வு வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விவரங்கள், தனிப்பட்ட பகுதியின் முக்கிய அளவீடுகளைத் தொடர்புடையவர்களைக் கொண்டு மறு ஆய்வு செய்யும் வகையில் உள்ளது. மாவட்டக் கல்வி மதிப்பாய்வை அவ்வப்போது நடத்த ஏற்பாடு செய்யுங்கள். கல்வி முறை மற்றும் தரத்தை மேம்படுத்துதல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வை மேம்படுத்தும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தங்க மோதிரம், கைச்செயின், வெள்ளி நாணயம் என கொட்டிய பரிசு மழை.. மீனாட்சிபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்!

ABOUT THE AUTHOR

...view details