தேனி: மதுரையைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர், ஆண்டிபட்டியை அடுத்துள்ள தேக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருக்கும் அவருக்குச் சொந்தமான இடத்தில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கான வேலைகளை செய்து வந்துள்ளார். பெட்ரோல் பங்க் வைப்பதற்கு வருவாய்த் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டி, சுப்பிரமணி ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் காதர் ஷெரிப்பிடம் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, தடையில்லா சான்று வழங்குவதற்கு தனக்கு ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என சுப்பிரமணியிடம் தாசில்தார் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜனிடம் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து, சுப்பிரமணியிடம் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு ரசாயனம் தடவிய பணத்துடன் சென்ற சுப்பிரமணியனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தூரத்தில் இருந்தபடி கண்காணித்துள்ளனர். பின்னர், பணத்தை தாசில்தாரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் காதர் ஷெரிப்பை கையும் களவுமாக பிடித்தனர்.