தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் தீ விபத்து; 9 பைக்குகள் தீயில் கருகி நாசம்!

Tirunelveli fire accident: நெல்லை மாவட்டத்தில் தசரா திருவிழாவிற்கு விரதம் இருக்கும் பக்தர்களால் அமைக்கப்பட்ட கொட்டகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் 9 இரு சக்கர வாகனங்களும் தீயில் கருகி முற்றுலும் சேதமடைந்தது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

நெல்லையில் தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் தீ விபத்து
நெல்லையில் தசரா திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் தீ விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து, வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த வகையில் நவராத்திரி முதல் நாள் கோயிலில் நடைபெறும் கொடியேற்றத்தை தொடர்ந்து, காப்பு கட்டி மாலை அணிந்த பக்தர்கள் விரதம் தொடங்குவார்கள்.

காளி உள்ளிட்ட தெய்வ வடிவங்களை வேடமணியும் பக்தர்கள், ஊரின் ஒதுக்குப்புறத்தில் கொட்டகை அமைத்து அங்கு காளி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை காளிப்பிறையாக மாற்றி அங்கேயே தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்நிலையில் பாளையங்கோட்டை, அண்ணா நகர் பகுதியில், குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா விரதம் இருந்த பக்தர்கள், அப்பகுதியில் ஓலையிலான காளிப்பிறை கொட்டகை அமைத்து வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர்.

இன்றைய தினம் தசரா விழா நடைபெறும் சூழலில் நேற்று இரவு விழாக்களை முடித்துவிட்டு, அதிகாலையில் விரதம் இருந்த பக்தர்கள் வாகனம் மூலம் குலசேகரப்பட்டினத்திற்கு புறப்பட்டு சென்றனர். அந்த நேரத்தில் கொட்டகையில் இருந்த மின்விளக்குகளில் திடீர் கசிவு ஏற்பட்டு கொட்டகை முழுவதும் தீ பற்ற தொடங்கியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாளையங்கோட்டை காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கொட்டகை முழுவதும் தீப்பற்றி எரிந்த சூழலில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்பது இருசக்கர வாகனங்களும் முற்றிலும் கருகி சேதம் ஆனது.

இதையும் படிங்க: பஞ்சாயத்து தலைவியை கொடூரமாக வெட்டிய வழக்கு; நெல்லை ஜேக்கப் உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கொட்டகையில் திடீரென தீ பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் கொட்டகையில் விரதம் இருந்து பக்தர்கள் அனைவரும் கோயிலுக்கு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details