விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகில் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தாமரைக்கனி. அதே பகுதியில் பேண்ட் வாத்திய குழு வைத்துள்ளவர் கணபதி சங்கர். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் தாமரைக்கனி, நண்பரின் நிச்சயதார்த்த விழாவிற்கு கணபதி சங்கரின் இசைக்குழுவை நாடாமல் வேறு ஒருவரை தொடர்புகொண்டுள்ளார்.
மேலும், நிச்சயதார்த்த நிகழ்ச்சியின்போது, தாமரைக்கனி மற்றும் அவரது நண்பர்கள் நடனமாடிக்கொண்டு சென்றபோது கணபதி சங்கருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை ஊர் பொதுமக்கள் அனைவரும் தடுத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை தனது நண்பரைக் காண சென்றபோது கணபதி சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து தாமரைக்கனியை அடித்து கத்தியால் குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை சம்பந்தமாக கணபதி சங்கரின் தந்தை சக்தி கணேஷ், அண்ணாமலை ஈஸ்வரன்( திமுக ஒன்றியக் கவுன்சிலர்), கணேஷ் குமார், செந்தில்குமார், ஜெய் கணேஷ் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை!