விழுப்புரம்: ஜல் ஜீவன் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியாக குழாய்கள் பதிக்கப்பட்டு மோசடி நடைபெற்றதை நமது ஈடி பாரத் தமிழ் செய்திகள் கடந்த 22-ம் தேதி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. அதே பாணியில் ஒரு மோசடி சம்பவம் ஒன்று விழுப்புரம் மாவட்டத்திலும் அரங்கேறியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் வானூர் அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் 15-வது மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் சுமார் 752 மீட்டர் தூரத்திற்கான குழாய்கள் பதிக்கப்பட்டு 40 குடிநீர் குழாய்கள் பதிக்க 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நிதியாக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரான திமுகவைச் சேர்ந்த சுலோச்சனா மற்றும் அவரது மகன் சக்திவேல் ஆகியோர் 40 சிமெண்ட் கற்களை புதைத்து அதில் டம்மி(போலி) குழாய்களை மட்டுமே பதித்து குடிநீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிவிட்டதாக போலியான கணக்கு காட்டியுள்ளனர்.
கடைக்காக நட்டு வைக்கப்பட்ட சிமெண்ட் கற்களையும், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த வெற்றுக் குடிநீர் குழாய்களையும் ஒழிந்தியாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பிடுங்கி வெளியே எடுத்து இந்த மோசடியை அம்பலப்படுத்தியுள்ளனர். இதனால் ஜல் ஜீவன் திட்டம் மக்களுக்காக முழுமையாக செயல்படுத்துகிறதா? என்று அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க:'ஜல் ஜீவன்' திட்டத்தில் பைப்பே இல்லாமல் அமைக்கப்பட்ட வெற்றுக்குழாய்கள்!