சுற்றுலாத்தலமான வேளாங்கண்ணியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. இவை, ஊரடங்கினால் மூடப்பட்டபோதும், வேளாங்கண்ணி மாதாகுளம் அருகே தனியார் விடுதி ஒன்றில் ஊழியர்கள் சிலர் தங்கி பராமரிப்பு பணிகளைச் செய்துவந்தனர். அதில், ஒருவரான கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் (32) என்பவருடன், அதே இடத்தில் பணிபுரியும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (32) என்பவர் குடித்துவிட்டு சில நாட்களாகவே தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஆக.11) மாலையும் குடித்துவிட்டு சதீஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, முகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷின் இடதுபக்க மார்பு, இடதுபக்க விலா எலும்புப் பகுதிகளில் குத்தியுள்ளார். இதில், ரத்தவெள்ளத்தில் சரிந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முகேஷை தடுக்கச் சென்ற அதிமுக நகரச் செயலாளர் சாம்சன் பிராங்கிளினுக்கும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, சாம்சன் பிராங்கிளின் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முகேஷ் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சதீஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி வேளாங்கண்ணி பகுதியில் பல விடுதிகள் திறக்கப்பட்டிருப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதையும் படிங்க: மதுக்கடை வாசலில் ரவுடி கொலை: சிசிடிவி வைத்து தீவிர விசாரணை!