மயிலாடுதுறை மாவட்டத்தில் தினந்தோறும் 200-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரண்டாவது அலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு குறைவதோடு, உயிரிழப்பு விகிதமும் குறையும் என்ற மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலால் மயிலாடுதுறையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் 45 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் இன்று நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
250 நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடவேண்டாம் என்று அரசு அலுவலர்கள் முன்கூட்டியே அறிவித்திருந்தனர். ஆனால் காலைமுதல் 500-க்கும் மேற்பட்டோர் பட்டமங்கலத் தெருவில் சாலையோரத்தில் நீண்டவரிசையில் தடுப்பூசி போட்டுகொள்வதற்காக பல மணிநேரம் காத்துநின்றனர்.
கரோனா தொற்றை குறைக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று அலுவலர்கள் அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாமல் சமூகஇடைவெளியின்றி வரிசையில் அதிகம் பேர் காத்துநின்றனர்.
250 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. இதனால் காத்து நின்ற பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். மயிலாடுதுறை நகராட்சியில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அனைத்து வார்டுகளிலும் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.