மதுரை வண்டியூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). கட்டடக் கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி ராக்கு, மகள் விஜயலட்சுமி, மகன்கள் அருண்குமார் (26), வீரமணி (23) ஆகியோர் உள்ளனர். மகள் விஜயலட்சுமிக்கு பாண்டித்துரை என்பவருடன் திருமணமாகி, வில்வநத்தம் பகுதியில் அவர் வசித்து வருகிறார். முத்துக்குமாரின் இளைய மகன் வீரமணி துபாயில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
மூத்த மகன் அருண்குமார் என்பவருக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துக்குமார் நேற்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, அருண்குமார், தாயார் ராக்குவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், முத்துக்குமாருக்கு தூக்கம் கலைந்தது. தூக்கம் கலைந்ததால் கோபமடைந்த முத்துக்குமார், மகனிடம் சத்தம் போடாதே என்று எச்சரித்துள்ளார்.
ஆனாலும், அருண்குமார் கேட்காததால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் மண்வெட்டியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து முத்துக்குமார் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அருண்குமாரின் உடலை மீட்டு மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிப்பா? முதலமைச்சர் பதில்!